திருமலை: தெலங்கானாவின் கம்மம் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரராவ். இவரது வீட்டில் குடிநீர் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் உள்ள தண்ணீரை அங்கு வந்த குரங்கு ஒன்று குடித்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த குரங்கு, தொட்டிக்குள் விழுந்து தத்தளித்தது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரராவ், குரங்கை காப்பாற்றாமல் சரமாரி யாக அடித்துள்ளார். மேலும், குரங்கை பிடித்து அங்குள்ள மரத்தில் கயிறால் கட்டி தொங்கவிட்டுள்ளார். மேலும், தனது வளர்ப்பு நாய்களை விட்டு கடிக்க வைத்துள்ளார். இதில், அந்த குரங்கு துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. பின்னர் குரங்கின் உடலை, அங்கு சுற்றித்திரிந்த நாய்களுக்கு இரையாக வீசியுள்ளார். அப்போது, அங்கு கூட்டமாக திரண்ட குரங்குகள், இறந்த குரங்கின் உடலை சுற்றி நின்றுக்கொண்டு, நாய்கள் நெருங்காதவாறு பாதுகாத்தது.