பழநி: பழநி அருகே ஆங்கிலேயர் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே போடுவார்பட்டியில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் சீரமைப்பு பணி நடந்தது. அப்போது இரு பழங்கால நாணங்கள் கிடைத்தன. இதனை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த நாணயங்கள் இரண்டும் பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் ஆகும். இதில் ஒன்று மிகச்சிறிய 2 அணா நாணயம். 2 நாணயங்களும் வெள்ளியால் செய்யப்பட்டவை. இந்தியா நேரடியாக விக்டோரியா மகாராணியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது முதல் வெள்ளி, செம்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. தற்போது இங்கு கிடைத்துள்ள 2 நாணயங்களில் ஒன்றின் முன்புறத்தில் மகாராணியின் மார்பளவு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.