ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்: ஒரு சி.ஆர்.எஃப் வீரர் மற்றும் சிறுவன் மரணம்!

அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில்  ஒரு சி.ஆர்.எஃப் வீரர் மற்றும் ஒரு சிறுவன் மரணமடைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனிடையே இந்த ஆண்டு தொடக்கம் முதல் பாதுகாப்புப் படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளனர். காயமடைந்த அவரை மாவட்ட மருத்துவமனை அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் 6 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷியாமல் குமார் என்றும், கொல்லப்பட்ட சிறுவன் அண்டை பகுதியான குல்கம் மாவட்டத்தைச் சேர்ந்த நஹீன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், இந்த திடீர் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: