கோவையில் முழு முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை: மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு!

கோவை:  கோவையில் முழு முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மூலமே இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 280 ஆக உள்ளது.

சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 114 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, கோவையில் வெளிமாநிலங்கள், மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் 17 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது,  அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஒவ்வொரு நாளும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக சுமார் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  மேலும், கோவையை பொறுத்தவரையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்த நாட்களிலிருந்து பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்ததால்,  உள்ளூர் மக்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது ஊரடங்கு தேசிய அளவில் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இருசக்கர வாகனங்கள், விமானங்கள் மற்றும் இரயில் சேவை உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியிலிருந்து வரக்கூடிய மக்கள் தங்களை பரிசோதித்து கொள்ளாமல் வருவதால்தான் இதுபோன்ற தொற்று பிரச்சனைகள் ஏற்படுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: