மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக உள்ள ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டால், ஐபிஎல் தொடரில் நிச்சயமாக விளையாடுவேன் என்று ஆஸி. நட்சத்திரம் டேவிட் வார்னர் கூறியுள்ளார். உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து முடக்கம், வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த தொடர் ஒத்திவைக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. இதில் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஐசிசி தரப்பு தடுமாறி வருகிறது. ஒருவேளை உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால், அந்த சமயத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஆஸி. அணி தொடக்க வீரர் வார்னர் கூறியதாவது: சொந்த மண்ணில் உலக கோப்பையில் விளையாடுவதை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் உலக கோப்பை டி20 தள்ளிப்போனால், அந்த சமயத்தில் ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவேன். கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதிக்கும் பட்சத்தில் இந்தியா சென்று ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும் என உறுதியாக நம்புகிறேன். கிரிக்கெட் விளையாடுவதை நாங்கள் எந்த அளவுக்கு விரும்புகிறோம் என்பதை அனைவரும் அறிவர்.