நாகர்கோவிலில் இலவச உபகரணங்கள் விநியோகம் சமூக இடைவெளியின்றி 2,000 பேர் திரண்டனர்

நாகர்கோவில்: நாகர்கோவில் நல வாரிய அலுவலகத்தில் சுமார் 2000 பேர் திரண்டதால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. கட்டுமான தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஹெல்மெட், கையுறை, கண்ணாடி, மேலுறை, காலணி போன்றவை இவற்றில் அடங்கும். ஒரு நபருக்கு ₹2 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் கிடைக்கும் என தெரிவித்து இருந்தனர். அந்தந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் இதை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய இரு இடங்களில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் உள்ளது. இதில் நாகர்கோவிலில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று 2வது நாளாக தொழிலாளர்கள் குவிந்தனர். காலை 10 மணியளவில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை திரண்டனர். இதனால் அதிக நெரிசல் ஏற்பட்டது. சமூக இடைவெளி கேள்விக்குறியானது. ஒரு சிலர் சுவர் குதித்து அலுவலகத்துக்குள் புகுந்தனர்.  இது குறித்து தகவல் அறிந்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் வந்தனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. நேரம் செல்ல, செல்ல நெரிசல் அதிகரித்ததால், கூட்டத்தை கலைக்க போலீசார் விரட்ட தொடங்கினர். இதனால் பெண்கள்  சிதறி  ஓடினர். பின்னர் அதிகாரிகள் வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொத்தனார் என பதிவு செய்துள்ள ஆண்களுக்கு மட்டும்தான் உபகரணங்கள் கிடைக்கும். பெண்களுக்கு எந்தவித உபகரணங்களும் வழங்கப்படாது என கூறினர். இதை கேட்டதும் பெண்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.  பின்னர் உபகரணங்களை வழங்கப்பட்டது.

Related Stories: