பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் களமிறங்கும் பெங்களூரு எப்சி அணியில் பிரேசில் வீரர் கிளெய்டன் சில்வா இணைந்துள்ளார். கொரோனா பீதி காரணமாக ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் எப்போது தொடங்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்சி அணி களமிறங்க முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது. அந்த அணிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த முன்கள ஆட்டக்காரர் கிளெய்டன் சில்வா (33) ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரேசிலின் மதுரேரா, தாய்லாந்தின் ஒசோட்ஸ்பா, போலீஸ் டெரோ, முவாங்தோங் யுனைடட், சியாங்கிராய் யுனைடட், மெக்சிகோவின் டெல்ஃபைன்ஸ், சீனாவின் ஷாங்காய் ஷென்சின் ஆகிய பிரபல கால்பந்து கிளப்களுக்காக களம் கண்டுள்ளார். கடந்த ஓராண்டாக தாய்லாந்தின் சுபன்புரி கிளப்புக்காக விளையாடி வந்தவரை, பெங்களூரு அணி நேற்று ஒப்பந்தம் செய்தது. சில்வா 2008ம் ஆண்டு முதல் தொழில்முறை ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.