ஸ்பான்சர் பெறும் தொகைக்கு வரி செலுத்தப்படுகிறது; ஒப்பந்தம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நீடிக்கும்....பிசிசிஐ விளக்கம்

மும்பை: ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நீடிக்கும் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20  பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா தந்த பதிலடியில் சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சீனப்பொருட்களை தடை செய்ய வேண்டுமென்றும், சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டுமென்றும் சமூகவலைதளத்தில்  எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் விவோ நிறுவனத்தை பிசிசிஐ நீக்க வேண்டுமென்றும் பலர் கருத்துகளை பதிவிட்டனர்.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது ஐந்து வருட ஒப்பந்தம். அது முடியும் வரை  இது தொடரும். சீன நிறுவனங்களுக்கு உதவுவது என்பது வேறு, சீன நிறுவனங்களிடம் இருந்து நாம் பயன்பெறுவது என்பது வேறு. அந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சீன நிறுவனங்கள் இந்திய நுகர்வோர்களிடம் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து பணம் ஈட்டுகிறார்கள். அப்படி இருக்க, அதன் லாபத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஸ்பான்சராக வரும் பணத்தை நாம் எப்படி விட முடியும்? ஸ்பான்சர்  பெறும் தொகைக்கு வரி செலுத்தப்படுகிறது. இது இந்தியாவிற்குத் தான் சாதகம் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: