லண்டன்: கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக 35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக இங்கிலாந்தின் பிரபல வங்கியான ஹெச்.எஸ்.பி.சி. அறிவித்துள்ளது. ஹெச்.எஸ்.பி.சி. வங்கி முன்னதாக கொரோனாவை காரணம் காட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்தது. சர்வதேச அளவில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பணிநீக்கம், சம்பள குறைப்பு, சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு, புதிய பணி அமர்தல் நிறுத்தி வைப்பு என பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தனது வணிகத்தில் உள்ள செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் 35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி அறிவித்துள்ளது. இது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்நிறுவனத்திற்கு உலகம் முழுக்க உள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.