புதுடெல்லி: பாஜ ஆளும் குஜராத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ராகுல் காந்தி, ‘அடுத்த குஜராத் மாடல் அம்பலமாகி உள்ளது,’ என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா நோய் தொற்று தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘கோவிட் 19 உயிரிழப்பு எண்ணிக்கை: குஜராத் 6.25 சதவீதம், மகாராஷ்டிரா 3.73 சதவீதம், ராஜஸ்தான் 2.32 சதவீதம், பஞ்சாப் 2.17 சதவீதம், புதுச்சேரி 1.98 சதவீதம், ஜார்கண்ட் 0.5 சதவீதம், சட்டீஸ்கர் 0.35 சதவீதமாகும். ஆகவே, இதிலும் குஜராத் மாடல் அம்பலமாகி உள்ளது.’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டிலேயே அதிக நோய் தொற்றுள்ள மாநிலங்கள் வரிசையில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது, இங்கு, 24,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,505 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற ஊடக செய்தியையும் இணைத்துள்ளார்.