வாஷிங்டன்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகளவில் திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2021ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செஸ்ல் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்கர் விழா இரண்டு மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக ஹாலிவுட்டில் அதிகளவில் திரைப்படங்கள் தயாரிப்பு நிலையிலேயே இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அங்குள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது, பிப்ரவரி 28ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அகாதமி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.