கொரோனா இருப்பது தெரியாமலேயே கொண்டாட்டம்; திருமண வரவேற்பில் புது மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு: மணப்பெண் உட்பட 70 குடும்பம் பரிசோதனை

திருமலை: ஆந்திராவின் பத்திகொண்டா மண்டலம், மர்ரிமானதாண்டாவை சேர்ந்த ஒரு வாலிபர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு வேல்தூர்த்தி மண்டலம், எல்.தாண்டாவை சேர்ந்த இளம் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக வாலிபர் கடந்த 10ம் தேதி ஐதராபாத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை வாலிபருக்கும், இளம்பெண்ணிற்கும் எல்.தாண்டா கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு அதே கிராமத்தில் திருமண  வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புதுமாப்பிள்ளை திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் சந்தேகத்தின்பேரில் அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை குறித்து கேட்டபோது, அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை கர்னூல் கொரோனா வார்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், புதுப்பெண் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருமணத்தில் பங்கேற்ற சுமார் 50 உறவினர்கள், கிராமத்தை சேர்ந்தவர்கள் உட்பட அனைவரும் திருமண வரவேற்பில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் கிராமம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 70 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கு சளி  மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: