ஆறுமுகநேரி: ஆத்தூர் அருகே சாலையோரம் இருந்த பசுமையான மரங்கள் அடியோடு வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், மேலஆத்தூர் அருகே சில ஆண்டுகளுக்கு முன் துணை மின் நிலையம் அமைக்கும் பணியினை மின்சார வாரியம் மேற்கொண்டது. இப்பணியில் புதிய மின் பாதை அமைக்கும் போது மின் வயர்களுக்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் கிளைகள் வெட்டப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மின் தடை செய்யப்பட்ட நாளில், ஆத்தூரில் இருந்து மேலாத்தூர் செல்லக்கூடிய பாதையில் உள்ள பனை, வேம்பு உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்களை அடியில் இருந்து முழுவதுமாக வெட்டியுள்ளனர். மேலும் 100 நாள் வேலைதிட்டத்தில் நட்டப்பட்ட மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. சில வெட்டப்பட்ட மரங்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.