கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் மகள் வித்யாவை (14), 2வது மனைவி மூக்காயி, உறவினர் குமார் ஆகியோருடன் சேர்ந்து நரபலி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பன்னீர்செல்வம், குமார் கைது செய்யப்பட்டனர். மூக்காயி மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதற்கிடையில் நரபலி கொடுத்தால் நிைறய செல்வம் கிடைக்கும் என்று அவரிடம் கூறிய பெண் மந்திரவாதி வசந்தி(46) மற்றும் அவரது உதவியாளர் முருகாயி ஆகியோரை போலீசார் பிடித்து 5 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் வசந்தி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். முருகாயி நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த 6 நாட்களாக மந்திரவாதி உதவியாளர் முருகாயியிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் பற்றி தனிப்படை போலீசார் கூறியதாவது: மந்திரவாதி வசந்தி வசியம் செய்வதை தொழிலாக கொண்டு செயல்பட்டுள்ளார். பிறரை முடக்குவது, தொழில்களில் நஷ்டமடைய செய்வது, கை, கால்களை இழக்க வைப்பது, பெண்களை ஆண்களுக்கு வசியம் செய்து கொடுப்பது என செயல்பட்டுள்ளார்.