ஆகஸ்ட் மாதம் இலங்கையுடன் ஒருநாள், டி20 தொடர்கள்: பிசிசிஐ தீவிர ஆலோசனை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளுடன் மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்தில் பிரிமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா சாம்பியன்ஷிப் உட்பட பிரபல கால்பந்து லீக் தொடர்கள் மீண்டும் தொடங்கிவிட்டன. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரும் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் எப்போது களமிறங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட இந்த தொடரை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தலாமா என்று இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. அரசு அனுமதி அளித்தால், நிச்சயமாக இந்த போட்டிகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: