போஸ்டன்: கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக வெளியான சர்ச்சைக்குரிய ஆய்வறிக்கையை லேன்செட் இதழ் திரும்பப் பெற்றது. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரை நோயாளிகளுக்கு தரப்பட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் இம்மருந்து பலனளிப்பதாக ஏற்றுக் கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் 70 சதவீத ஹைட்ரோ குளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால்தான் கோவிட்-19 இறப்புகள் அதிகரிக்கின்றன என பிரபலமான லேன்செட் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இது உலகளவில் கடும் சர்ச்சையை எழுப்பியது.