புதுடெல்லி: நாட்டில் கடந்த 3 மாதங்களாக பரவி வரும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு மற்றும் அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொது மக்கள் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு நிபுணர்களுடன் காணொலி மூலமாக அவ்வப்போது கலந்துரையாடி வருகின்றார். இதன் தொடர்ச்சியாக ராகுல்காந்தி, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜிவ் பஜாஜூடன் ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி நேற்று காணொலி மூலமாக கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின்போது, ராஜிவ் பஜாஜ் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு தளர்வின்போது மென்மையான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நாம் பார்க்கவில்லை. ஒருபுறம் பலவீனமான ஊரடங்கானது வைரஸ் இன்னும் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. ஊரடங்கிற்கு பின்னரும் கூட வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகின்றது.