சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மின்சார தொழிலாளர் மற்றும் பொறியாளர் கூட்டமைப்பின் தமிழக பிரிவு தொழிற்சங்கங்கள் மற்றும் மின்வாரியத்தில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டு கூட்டம் கடந்த மே 21ம் தேதி நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜூன் 1 தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டு குழு சார்பாக பிரிவு அலுவலகங்களில் பணிக்கு செல்வதற்கு முன்பாகவும், அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை அல்லது சாத்தியமான நேரங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து கண்டன முழக்கமிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.