சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் மேலும் 4 பேரை இணைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை நடத்துவது குறித்தும், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்தும் வரும் பிரச்னைகளை ஆய்வு செய்வது அவற்றுக்கு தீர்வு காண்பதற்கும் ஒரு வல்லுநர் குழுவை பள்ளிக் கல்வித்துறை கடந்த 12ம் தேதி அறிவித்தது. இதன் தலைவராக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் இருப்பார், பள்ளிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட இன்னும் சில இயக்குநர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டும் கற்றல் சார்ந்த பிரச்னைகளை இந்த குழு ஆய்வு செய்து வருகிறது.