பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2500 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிந்தது. கடந்த 23ம் தேதி 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, 26ம் தேதி 2 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று முன்தினம் 1500 கனஅடியாகவும் சரிந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ஒகேனக்கல்லுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் படிப்படியாக அதிகரித்த நீர்வரத்து, நேற்று காலை 10 மணி நிலவரப்படி தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு 2500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் மேட்டூர் அணை நோக்கி செந்நிறத்தில் பாய்ந்தோடி செல்கிறது. .