சென்னை: பால் டப்புகள் குறைவாக இருப்பதால் ஆவின் பாலை கோணிப் பையில் நிரப்பி லாரிகளில் குப்பை போல கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுகிறது என்று பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது. அதன் காரணமாக தனியார் நிறுவனங்களின் பாலினை விட தமிழக அரசின் ஆவின் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த சில மணி நேரங்களிலேயே கெட்டுப் போகின்ற நிலை தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. இதனால் பால் முகவர்கள் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆவின் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த சில மணி நேரங்களிலேயே கெட்டுப் போவதற்கு ஆவின் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கான செயல்பாடுகள் தான் காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் பால் கொள்முதல் தொடங்கி, பாக்கெட்டில் அடைத்து விநியோகத்திற்கு கொண்டு செல்வது வரை ஆவின் நிர்வாகம் மெத்தனப் போக்கோடு தான் நடந்து வருகிறது. எந்த அளவிற்கு நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது என்பதற்கு உதாரணமாக வேலூர் மாவட்ட ஆவின் நிர்வாகம் இருக்கிறது.