அக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

மெல்போர்ன்: இந்திய அணியுடன் வரும் அக்டோபர் மாதம் டி20 தொடரில் விளையாட உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸி. கிரிக்கெட் வாரியம் தங்கள் அணிக்கான புதிய போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஜிம்பாப்வே அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் ஆஸி. அணி, அக்டோபரில் இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். முதல் போட்டி அக்.11ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறும். இதைத் தொடர்ந்து கான்பெரா (அக்.14), அடிலெய்டு (அக்.17) மைதானங்களில் போட்டிகள் நடக்க உள்ளன.

பின்னர் டிசம்பர் மாதம் மீண்டும் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் டிசம்பர் 3ம் தேதி தொடங்கும். அடுத்து அடிலெய்டில் டிச. 11-15 நடக்க உள்ள 2வது டெஸ்ட் பகல்/இரவு போட்டியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. மெல்போர்னில் 3வது டெஸ்ட் போட்டியும் (டிச. 26-30), சிட்னியில் 4வது டெஸ்ட் (ஜன. 3-7) போட்டியும் நடக்க உள்ளன. ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடர் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட அட்டவணையில் எதுவும் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

Related Stories: