ஊட்டி: வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பலர் இ-பாஸ் பெற்று வருவதால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நீலகிரியில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிகாரிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா பரவல் தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 14 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை கடந்த வாரம் அறிவித்துள்ளது. அதன்படி இ பாஸ் பெற்றுக் கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு செல்லலாம் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் வசிக்கும் பலர் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். அதேபோல், மற்ற மாவட்டங்களில் பணி நிமித்தமாக சென்ற பலரும் சொந்த ஊரான ஊட்டிக்கு வருகின்றனர். அங்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையை சேர்ந்த பலரும் தற்போது ஊட்டி வரத்துவங்கியுள்ளனர். அங்கு பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், அவர்கள் இங்கு வரும்போது, மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏற்கனவே கர்ப்பிணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவதாக கூடலூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.