கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 22.60 அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 20ம் தேதி முதல் கெலவரப்பள்ளி அணைக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தொடர்ந்து 40.67 அடிக்கு நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 20ம் தேதி வரை, தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட கிருஷ்ணகிரி அணையில், தற்போது நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.