காராச்சி: பாகிஸ்தானில் விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 97 பேர் ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2 பேர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து பிகே-8303 என்ற விமானம் நேற்று முன்தினம் கராச்சி புறப்பட்டு சென்றது. இதில், 91 பயணிகளும், 8 ஊழியர்களும் இருந்தனர். ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க தயாரான போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. மீண்டும் 2வது முறையும் விமானி விமானத்தை தரையிறக்க முயற்சித்தார். ஆனால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.