பெங்களூரூ: விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு ரஷ்யாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு விழா வரும் 2022ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில், விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அனுப்பப்படும் விண்கலத்தில் செல்லும் இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேருக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கிய பயிற்சி கொரோனா தொற்று அபாயம் காரணமாக சில தினங்களுக்கு பின் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளதாக ரஷ்ய விண்வெளி கழகம் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.