திருச்செந்தூர்: உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. வன விலங்குகளையும் கொரோனா தாக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகி வருகிறது. இதையடுத்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கியக் கோயில்களில் வளர்க்கப்பட்டு வரும் யானைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் யானை தெய்வானைக்கு தினமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்துமிக்க உணவு கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தினமும் காலை கோத்தாரி புல், மாலையில் தர்ப்பூசணி, செவ்வாழை, கீரை வகைகள் உணவாக கொடுக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.