சாலை விபத்தில் உயிரிழந்த திருச்சி VAO குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்; ஒருவருக்கு அரசு வேலை...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கடந்த 13-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த சதாசிவம் மகன் குமார் (46). இவர் திருச்சி மாவட்டம் சிறுகமணி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். தற்போது ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகர் அண்ணாநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாக சேதுராப்பட்டி உள்ள அரசு பொறியியல் கல்லூரி கரோனா தடுப்பு பணிக்கான சிறப்பு முகாமில் பொறுப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே, கடந்த புதன்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.

மன்னார்புரம் மின் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது மருங்காபுரியில் இருந்து பின்னால் வந்துகொண்டிருந்த சரக்கு வேன் மோதியதில் கிராம நிர்வாக அலுவலர் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரான மருங்காபுரி தேனூர் பகுதியைச் சேர்ந்த சேகர்(20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பணியின்போது கிராம நிர்வாகி உயிரிழந்துள்ள அனைவரும் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் கொரோனா பணியில் ஈடுபட்டு வீடு திரும்பும் போது உயரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Related Stories: