சச்சின் பந்துகளை அதிரடியாக அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார்: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் புகழாரம்

இஸ்லாமாபாத்: சச்சின் பந்துகளை அதிரடியாக அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் புகழ்ந்து உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், விக்கெட்-கீப்பருமான ரஷித் லத்தீப் சச்சின் தெண்டுல்கருக்கு எதிராக விளையாடிய தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். நான் கீப்பிங் செய்யும் போது பல்வேறு வீரர்கள் விளையாடுவார்கள், ஆனால் சச்சின் விளையாட வந்தால் மட்டும் அவர் வெளியேறக் கூடாது என எனது மனதில் தோன்றும் என ரஷித் லத்தீப் கூறினார். அவர் பேட்டிங் செய்வதை பார்க்கும் போது  எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவித்தார். தொலைக்காட்சியில் அவரது ஆட்டத்தை பார்க்கும் போது இதுபோன்ற உணர்வு தோன்றியதில்லை எனவும் கூறினார்.

ஆனால் நான் அவர் பின்னால் நின்று கீப்பிங் செய்யும் போது அவர் வெளியேறக் கூடாது என என் மனம் ஏங்கும் என குறிப்பிட்டார். சச்சின் தெண்டுல்கர் தனித்தன்மை உடையவர். நான் அவரது பின்னால் நின்று எது சொன்னாலும், அவரது முகத்தில் சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருக்கும். மற்ற வீரர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் சச்சினும், முகமது அசாருதீனும் தான் வித்தியாசமானவர்கள். எதிரில் விளையாடும் வீரர்களின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிப்பார்கள். அதனால் தான் சச்சினை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். குறிப்பாக விக்கெட் கீப்பர்களுக்கு அவரை மிகவும் பிடிக்க காரணம் இதுதான். சச்சின்  பந்துகளை அதிரடியாக அடிந்த்தாலும், வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார். மைதானத்தில் விளையாடும் போது அவர் நடந்து கொள்ளும் விதம் எப்போதும் நினைவில் இருக்கும் என கூறினார்.

Related Stories: