தூத்துக்குடி: அன்னையர் தினமான நேற்று ரோட்டில் மயங்கி விழுந்த மூதாட்டியை பரிவுடன் அழைத்து சென்று வீட்டில் சேர்ந்த 2 பெண் போலீசாருக்கு பொதுமக்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையின் கிழக்கு வாசல் பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் ரோட்டில் மயங்கி விழுந்தார். இதனை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் போலீசார் உமாமகேஷ்வரி, அபிதா ஆகிய இருவரும் கண்டனர். உடனடியாக அவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் மூதாட்டியிடம் அவரது வீட்டு முகவரியை கேட்டுள்ளனர். அவர் முனியசாமிபுரத்தில் இருப்பதாகவும், மருந்து வாங்க மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.