சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி வண்டு, புழுக்களுடன் சாப்பிட முடியாத வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுதும் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரேசன் கடைகளில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் இயங்கும் 625 ரேசன் கடைகள் உட்பட மொத்தம் 802 ரேசன் கடைகள் உள்ளன. மொத்தம் 3லட்சத்து 89ஆயிரத்து 735 ரேசன் கார்டுகள் உள்ளன.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வழங்கப்பட்ட புழுங்கல் அரிசி பழுப்பு நிறத்தில் புழுக்களுடன் காணப்பட்டது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் தற்போது மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வழங்கப்பட்ட புழுங்கல் அரிசியும் தரமற்றதாக உள்ளது. அனைத்து அரிசியும் பழுப்பு நிறத்துடனும், கருப்பு நிறத்திலும், கட்டியாகவும், வண்டுகள், புழுக்களுடன் காணப்படுகிறது.