மயிலாடும்பாறை பகுதியில் கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய்: விவசாயிகள் கவலை

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, வாலிப்பாறை, மயிலாடும்பாறை, மூலக்கடை, முத்தாலம்பாறை உள்ளிட்ட பல கிராமங்களில் கொட்டை முந்திரி விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொட்டை முந்திரி சீசன் தொடங்கியுள்ள நிலையில், மரங்களுக்கு மருந்து தெளித்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மயிலாடும்பாறை பகுதியில், கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் ஏற்பட்டுள்ளது. இப்பாதிப்பு ஏற்பட்ட மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து உதிர்ந்து விடுகின்றன.

 

விவசாயிகள் மருந்துகள் தெளித்தும் கருகல் நோய் பாதிப்பை கட்டுபடுத்த முடியவில்லை. மேலும் நோய் பாதிப்பு அடுத்தடுத்த மரங்களுக்கு வேகமாக பரவி வருகிறது. கருகல் நோய் பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு கடமலை-மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உற்பத்தி குறைந்த காரணத்தல் கொட்டை முந்திரி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருகல் நோய் தாக்கத்தை கட்டுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: