வேப்பனஹள்ளி: கெலமங்கலத்திலிருந்து சொந்த ஊரான ஆந்திர மாநிலத்திற்கு செல்ல முயன்ற கூலி தொழிலாளர்களை, அம்மாநில போலீசார் அனுமதிக்காததால் மீண்டும் கெலமங்கலத்திற்கே திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர். கொரோனா ஊரடங்கால், வேலையிழந்த அவர்கள், தங்களது சொந்த கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தனர். வாகன போக்குவரத்து இல்லாததால் கெலமங்கலத்திலிருந்து நடந்தே ஊருக்கு புறப்பட்டனர். ஆனால், வேப்பனஹள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில், அவர்களை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்.