ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்; புதிய மாணவர்களுக்கு செப்.1 திறப்பு; மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: இந்தியாவில் வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கல்லூரிகளை வரும் செப்டம்பா் மாதம் திறக்க பல்கலைக்கழக மானியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. கொரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் தொடங்கியது முதல் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் பல தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த மாா்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-க்குப் பிறகு என்ன நிலவரம் என்பது தற்போது தெரியாது. ஊரடங்கு முழுமையாக எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரித் தோ்வுகளை ஏற்கெனவே ஒத்திவைத்தது.

இந்தநிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தோ்வுகளை நடத்துவது என்பது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் வரும் செப்டம்பா் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். மேலும், புதிய மாணவர்களுக்கு கல்லூரி வகுப்பு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: