ரியாத்: கொரோனா வைரஸ் தாக்கி சவுதி அரேபியாவில் 11 இந்தியர் மரணமடைந்ததாக, இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் 1.90 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் 27 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ், சவுதி அரேபியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு, 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 121 பேர் இறந்துள்ளனர்.
அந்நாட்டிற்கு பல்வேறு பணிக்காக இந்தியாவில் இருந்து சென்றவர்களில் 11 இந்தியர்கள் கொரோனா தாக்கி இறந்துள்ளனர். ஏப். 22ம் தேதி வரை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் கிடைத்த தகவல்களின்படி, 11 இந்தியர்களில் 4 பேர் மதீனாவிலும், 3 பேர் மக்காவிலும், 2 ஜெட்டாவிலும், ரியாத்தில் ஒருவரும், தம்மத்தில் ஒருவரும் இறந்துள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால், விமானப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதனால், இங்குள்ள இந்தியர் சவுதியில் சிக்கித் தவிப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது, சவூதி அரேபியாவிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.