உலகம் முழுவதும் கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. தற்போதைய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் அல்லது பெவிபிராவிர், ரெம்டிசிவிர், லோபினாவிர் போன்ற ரெட்ரோ வைரஸ் தடுப்பு மருந்துகள் தரப்படுகின்றன. இதில், பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் எதிர்பார்த்த அளவுக்கு நோயை குணமாக்கவில்லை என ஆய்வு முடிவுகள் கூறி உள்ளன. அதே சமயம், ஜப்பான் நிறுவன தயாரிப்பான பெவிபிராவிர் மருந்து நல்ல பலன் அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மருந்துக்கு கடந்த 2014ல் ஜப்பான் அரசு அனுமதி தந்தது. இது சளிகாய்ச்சல் மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எபோலா வைரஸ் தொற்றுக்கும் இந்த மருந்து நல்ல பலன் தந்துள்ளது.