கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் நேற்று முதல் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் செயல்பட துவங்கியது. தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணியாற்றுகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து தவித்து வந்தனர்.இந்நிலையில் கொரோனோ தொற்று பரவாத இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை இயக்க அந்தந்த மாநில அரசுகளே முடிவுகளை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுழற்சி முறையில் பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.