மதுரை: மதுரை கூடல்நகர் பகுதியில் தன் உயிரை பணயம் வைத்து, பாம்புடன் போராடி எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய் உயிருக்கு போராடி வருகிறது. மதுரை, கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புல்லிக்குட்டான் இனத்தைச் சேர்ந்த, ஒன்றரை வயதான பெண் நாயை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நாய், வழக்கத்தை மீறி பயங்கர சப்தம் எழுப்பியது. பின் வீட்டு வளாகத்திற்குள் அங்குமிங்கும் ஓடி, கார் செட் பகுதிக்கு சென்றது. இதைக்கண்டு ஓடி வந்த குடும்பத்தினரை, அந்த நாய் கார் செட்டிற்குள் நெருங்க விடவில்லை. அப்போது அங்கிருந்த ஒரு கட்டுவிரியன் பாம்பு, நாயை கடிக்கத் துவங்கியது. குடும்பத்தினர் பாம்பிடம் இருந்து நாயைக் காப்பாற்ற முயன்றும், இறுதி வரை குடும்பத்தினரை நெருங்க விடாமல் நாய் சண்டையை தொடர்ந்தது.