தியாகதுருகம் அருகே மின்மாற்றியை சீரமைக்க லஞ்சம் வாங்கிய மின் ஊழியர்: சமூகவலைதளத்தில் வைரல் வீடியோ

கள்ளக்குறிச்சி:  தியாகதுருகம் அருகே மின்மாற்றியை சீரமைக்க லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் வீடியோ வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 100 கிலோ வாட் திறன் கொண்ட 2 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மின்மாற்றி கடந்த 10ம் தேதி வெடித்து பழுதானது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.  இதையடுத்து, பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து மின்சாரம் வழங்கிட வேண்டுமென மின்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டனர். பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க ரூ.15000 வழங்கினால் தான் அதனை சீரமைக்க முடியும் என மின் ஊழியர்கள் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. வேறு வழி இல்லாமல் மின்துறை ஊழியரிடம் ரூ.15000-ம் பணத்தை வழங்க விவசாயிகள் முடிவு செய்து. முன் பணமாக ரூ.5000 வழங்கினர். இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பல்லகச்சேரி கிராமத்தில்  மின்மாற்றியை சீரமைக்க மின்சார ஊழியர் ஒருவர் பணம் வாங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின் ஊழியர்களிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

Related Stories: