தனியாக கொடுக்கும் உதவிக்கு சங்கம் பொறுப்பு இல்லை: நடிகர்களுக்கு அரசு அதிகாரி எச்சரிக்கை

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது தமிழக அரசு நியமித்த தனி அதிகாரியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனால் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாடக நடிகர், நடிகைகளுக்கு சில நடிகர்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக சங்கத்தின் சிறப்பு தனி அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். எனவே, தென்னிந்திய நடிகர் சங்க வங்கி கணக்கில் நிதி உதவி செய்யுமாறு  வேண்டுகோள் வைக்கப்பட்டது.

அதன்படி தற்போது சில உறுப்பினர்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள். சங்க உறுப்பினர்களுக்காக நிவாரண பொருட்களை பெறுவது, கொடுப்பது, நடிகர்-நடிகைகளின் விருப்பம். அதற்கு சங்கம் பொறுப்பு ஏற்காது. சங்க பெயர் மற்றும் தனி அதிகாரி பெயர் உபயோகப்படுத்தக் கூடாது என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: