புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதுள்ள நோய் எதிர்ப்பு மருந்துகள், காய்ச்சல் மருந்துகள் ஆகியவற்றை கொண்டே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா வைரசை பொருத்த வரையில் ஒரு முறை, அந்த வைரஸ் தாக்கினால் மீண்டும் இந்த வைரஸ் தாக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில், வைரசுக்கு எதிராக நம் உடலில் செல்கள் எதிர்ப்பு சக்தியை பெற்று விடுவதுதான். இதனால் பிளாஸ்மா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. இதை முதலில் தெரிவித்தது கேரள மருத்துவர்கள்தான். இதற்காக பரீட்சார்த்த ரீதியில் மத்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.