டெல்லி: வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணம் வூகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவை விட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பரவுவது கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மத்திய அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.