திருவள்ளூர்: கொரோனா வைரசை தடுக்க திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 250 கிராம ஊராட்சிகள் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் சாலையில் சுற்றுகின்றனர். இதனால் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திலேயே முன்மாதிரியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமங்களை தனிமைப்படுத்தி முடக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா வைரஸ் தொற்றை பரவாமல் கட்டுபடுத்தவும், மக்களை பாதுகாக்கும் நோக்கில் கிராமங்களில் தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீட்டிலேயே கிடைக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஒவ்வொரு கிராமங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்லாமல் இருக்க அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமத்திலிருந்து யாரும் வெளியே செல்லாமல் இருக்கவும், வெளியாட்கள் கிராமத்திற்கு வருவதை தடுக்கவும் குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.