காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள குருத்வாராவில் தலிபான் தீவிரவாதிகள் நேற்று நடத்திய பயங்கர தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இவர்களுக்கு என்று சில வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. ஆனால், இவற்றின் மீது தலிபான்கள் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் காபுலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள சீக்கியர் வழிபாட்டு தலமான குருத்வாராவில் நேற்று தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த குருத்வாராவில் நேற்று காலை சீக்கியர்கள் பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தனர். அங்கு 150க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சரமாரி சுட்டனர்.