தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த வாலிபர் தப்பி ஓட்டம்

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த வாலிபர் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். தஞ்சை  மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூர் தென்னூர் கீழத்தெருவை  சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வருகிறார். இவர்,  சில நாட்களுக்கு சொந்த ஊர் திரும்பினார். சளி, காய்ச்சல்  இருந்ததால், கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் கும்பகோணம்  அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.  

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர், தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில்  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜ்குமார் யாரிடமும்  சொல்லாமல் அங்கிருந்து ஓடி விட்டார்.  ரத்த மாதிரி எடுப்பதற்கு முன் அவர்  ஓடி விட்டதாக கூறப்படுகிறது. எனவே ராஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு  இருக்குமா? இல்லையா? என்று தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: