சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவைகள் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை தலைமை செயலகத்திற்கு வரக்கூடிய புகார்தாரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கடந்த 17ம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு அரசு துறைகளில் மனு அளிக்க வருவதுண்டு. அதுமட்டுமின்றி அமைச்சர்களை பார்ப்பதாகவும், முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் கொடுப்பதற்காகவும் பொதுமக்கள் வருவார்கள்.