விளையாட்டு துளிகள்

*  மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் வீடுகளிலேயே பாதுகாப்பாக தங்கி நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

*  கொரோனா பாதிப்பை தவிர்க்கும் வகையில் கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்பதை இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவரது இந்த விழிப்புனர்வுப் பதிவு நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

*  மார்ச் 22ல் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வரவேற்று, ஆதரவு தெரிவித்துள்ளனர்.

*  ஆஸ்திரேலிய அணி முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னுக்கு சொந்தமான மதுபான ஆலையில் ‘708 ஜின்’ உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட்டு, மக்களுக்குப் பயன் தரும் வகையில் கை கழுவும் ‘சானிட்டைசர்’ தயாரிக்க உத்தரவிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

*  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பரவி வரும் நிலையில் ஒருநாள் போட்டித் தொடரை ரத்து செய்ததற்காக பிசிசிஐ-க்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.

*  பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்கள் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பிசிபி அறிவித்துள்ளது.

*   ஐபிஎல் டி20 தொடர் நடப்பது குறித்து ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகே உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

*  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இரண்டு வார காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: