சிட்னி: இங்கிலாந்தில் புதிதாக அறிமுகமாகும் ‘தி ஹண்ட்ரட்’ 100 பந்து கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் விலகியுள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20, டி10 என பல்வேறு பரிணாம மாற்றங்களை சந்தித்து வரும் கிரிக்கெட் விளையாட்டில் புது வரவாக ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடர் இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் அக்டோபருக்கு தள்ளி வைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா 100 பந்துகள் என்ற அடிப்படையில் நடைபெற உள்ள புதுமையான இந்த தொடரில், சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாட வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், குடும்ப மற்றும் சொந்த காரணங்களுக்காக ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடரில் இருந்து விலகுவதாக வார்னர் அறிவித்துள்ளார்.