திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்த 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்தை பராமரிக்க தவறியதற்காக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 269-ன் கீழ் காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதியிலிருந்து தொடர்ந்து போராட்டத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுக்கூட்டங்கள் வைக்க வேண்டாமென்றும் காவல் துறையினருக்கு மாநில அரசிடமிருந்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.