கோலாலம்பூர்: மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள். ஓரிரு நாட்களில் விசா முடிவடைய கூடிய சூழல் இருக்கக்கூடிய நிலையில், முகாம்களில் அடைக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் மலேசியாவும் ஒன்று. எனவே மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை என்பது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் இந்தியா செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் தான் பிலிப்பைன்ஸில் மருத்துவக் கல்லூரி பயில சென்ற மாணவர்கள் 200 பேர் மற்றும் பயணிகள் 100 பேர் என மொத்தம் 300 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்து வந்தனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டதன் காரணமாக அவர்கள் இரண்டு விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். அடுத்தகட்டமாக தற்போது மேலும் 200 பேர், அதாவது இந்தியாவை சேர்ந்தவர்கள் அதே கோலாலம்பூர் விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் தவித்து வருகின்றனர்.